“விஜய் சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” கனிமொழி எம்.பி கண்டனம்!!

800 படத்தில் இருந்து, நடிகர் விஜய்சேதுபதி விலகிய நிலையில், சமூக வலைத்தளத்தில் மர்ம நபர் ஒருவர், அவரின் மகளை பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும் மிரட்டல் விடுத்துள்ளது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
முத்தைய முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ திரைப்படம் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்த ஆனதால் பல எதிர்ப்புகள் எழுந்தன. அதில், நடிப்பதை தான் தொடரவே விரும்புவதாக சிங்கள செய்தி நிறுவனத்திற்கு விஜய் சேதுபதி பேட்டியும் அளித்திருந்தார்.
இந்நிலையில், முத்தைய முரளிதரனின் கோரிக்கையை ஏற்று விலகுவதாக விஜய்சேதுபதி நேற்று அறிவித்தார். இந்நிலையில், விஜய் சேதுபதியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய வேண்டும் என்று அருவருக்கத்தக்க ஒருவர், பதிவிட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
The perverse intimidation of Vijay Sethupathi's #daughter is not only barbaric but extremely dangerous to the very fabric of our society. Making women and children the soft targets is a cowardly act. The police should take stern action against the perpetrator.#VijaySethupathi
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 20, 2020
இது தொடர்பாக திமுக மகளிர் அணி தலைவியும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி குறிப்பிட்டுள்ளதாவது, “விஜய் சேதுபதியின் மகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் வக்கிர மிரட்டல் காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும் கூட. பெண்கள் மற்றும் குழந்தைகளை மிரட்டுவதுதான் கோழைகளுக்கு தெரிந்த ஒரே ஆயுதம். இதை செய்த நபர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு பிரபலமான நபரின் குடும்பத்தினர் மீது தாக்குதல் மற்றும் மிரட்டல் விடுவது தற்போது அதிகரித்து வருகிறது. முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடர் தோல்வி காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.