‘பப்ஜி விளையாட நெட் இல்ல’ கடலில் குதித்து உயிரை விட்ட இளைஞன்

கன்னியாகுமரி அருகே, பப்ஜி விளையாட போனில் இன்டர்நெட் இல்லாத நிலையில், தாயாரை தாக்கிவிட்டு, ஆத்திரத்தில் கடலில் குதித்து, இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டனி டேனியல். கூலித்தொழிலாளியான இவரது மகன் ஆன்றோ பெர்லின் (வயது 18). ஆன்றோ பெர்லின், நாகர்கோவில் அருகில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தான். எப்போதுமே ஆன்றோ பெர்லின் செல்போனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருப்பான் என கூறப்படுகிறது.
இதனை அவரது பெற்றோர் பல முறை கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி அவரது செல்போனின் இணைய வசதி முடிவடைந்துள்ளது. இதனையடுத்து செல்போனுக்கு ரீ சார்ஜ் செய்ய பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். இதில் அந்த இளைஞனுக்கும் அவனது தாய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆன்றோ அவரது தாயின் தலையில் கடுமையாகத் தாக்கியுள்ளான். இதில் அவனது தாய்க்கு தலையில் இரத்தம் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனை பார்த்து பயந்து போன பெர்லின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். இதனைத்தொடர்ந்து ஆன்றோவின் பெற்றோர் அவனை காணவில்லை என ராஜாக்கமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் கடந்த கடந்த 10 ஆம் தேதி தென்தாமரைகுளம் அருகே கடற்கரையில் ஒரு ஆண் சடலம் கரை ஒதுங்கியது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பிணமாக கிடந்த நபர் தாயுடன் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு சென்ற ஆன்றோ பெர்லின் என்பது தெரியவந்தது. வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்