குடும்பத்தை இழந்த இரண்டு சிறுவர்களை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மகாராஷ்டிரா அமைச்சர்!

மகாராஷ்டிரா கட்டட விபத்தில் குடும்பத்தை இழந்த 4 வயது சிறுவர்கள் இரண்டு பேரை வளர்க்கும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாக மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மும்பை அருகே உள்ள காஜல்புரா பகுதியில் தாரிக் கார்டன் என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி மூன்று நாளாக நடைபெற்றது. இந்த மோசமான விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 4 வயது சிறுவன் முகமது பங்கி, 18 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். சிறுவனை பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கு பலரும் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
ஆனால் சிறுவனின் தாய் மற்றும் உடன்பிறந்தோர் இந்த விபத்தில் உயிரிழந்தது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிறுவன் முகமதுவை தான் கவனித்துக் கொள்வதாக மகாராஷ்டிரா பொதுப்பணித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்த விபத்தில் குடும்பத்தை இழந்த மற்றொரு 4 வயது சிறுவனை வளர்க்கும் பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்தை இழந்து தவிக்கும் சிறுவர்களின் படிப்பு மற்றும் அவர்களை கவனித்துக் கொள்ளும் முழு பொறுப்பையும், தனது குடும்பத்தினரால் நடத்தப்படும் அறக்கட்டளை ஏற்றுக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். கட்டட விபத்தை நினைத்து கவலை அடைந்திருந்த மக்கள் அனைவரும், அமைச்சரின் இந்த அறிவிப்பால் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.