“எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்டால், விட்டு விடுகிறோம்!” உயர்நீதிமன்றத்தில் பதிலளித்த காவல்துறை!

தேசிய கொடி அவமதிப்பு வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி மனுத்தாக்கல் செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என காவல்துறை தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் பெரியார் சிலைகள் அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த எஸ்.வி சேகர், யூ டியூப் வீடியோவில் இந்திய தேசிய கொடியை அவமதிப்பு செய்து பேசியிருந்தார். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் தேசிய கொடியை அவமதித்து, தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசிய எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி, தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்ற பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா காணொலி காட்சி மூலம் விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஏ.நடராஜன், தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் இனி பேசமாட்டேன், இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என மனுதாரர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மேலும், நடந்த சம்பவத்துக்கு நீதிமன்றத்தின் முன் மனுதாரர் மன்னிப்பு கோரினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி விசாரணையை வரும் செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.