“கொரோனா வைரஸ் பரவலால், உலகில் 100 கோடி மக்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது” – உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் பரவலால், உலகில் 100 கோடி மக்களின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ், மேலும் கூறியதாவது: கொரோனாவால், மக்கள் ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள முடியாத சூழல் நிலவி வருகிறது. சமூக தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்களின் மன நலனில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்த்து போராட மன நலனும் முக்கியம். மனநல காப்பகங்களில் இருப்பவர்களும், பராமரிப்பு இல்லங்களில் இருப்பவர்களும் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம்.
கொரோனா பரவலால், மனநல ஆலோசனை மையங்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்தில், வைரஸ் பாதிக்கப்பட்டவகளை, மக்கள் புறக்கணித்ததால், அவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகினர். குறைந்த, நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் மனநல பாதிப்புக்கு எந்த சிகிச்சையும் மேற்கொள்ளவில்லை. வரும் அக்.,10ம் தேதி உலக மனநலனை முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.