இந்தியாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் மாநிலம் எது? வெளிவந்த புதிய ஆய்வறிக்கை!

இந்தியாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் மாநிலங்கள் பட்டியலில் மிசோரம் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவிலேயே மகிழ்ச்சியான மக்கள் வாழும் மாநிலங்கள் தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. பேராசிரியரான ராஜேஷ் கே. பில்லானியா என்பவர் இதுதொடர்பான ஆய்வு மேற்கொண்டு India Happiness Report 2020 முடிவுகளை வெளியிட்டார்.
அதன்படி இந்தியாவிலேயே மிசோரம் மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களை பஞ்சாப் மற்றும் அந்தமான் நிகோபார் பிடித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் பஞ்சாப், குஜராத், உத்தரபிரதேச மாநிலங்களும் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளன. பெரிய மாநிலங்களை பொறுத்தவரை பஞ்சாப், குஜராத், தெலங்கானா ஆகியவை மகிழ்ச்சியான மாநிலங்களாக இருக்கின்றன. அதேநேரத்தில் ஒடிசா, உத்தரகாண்ட், சட்டீஸ்கர் ஆகியவை பட்டியலின் இறுதியில் இடம்பிடித்துள்ளன.
ஆறு காரணிகளை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியலை தயார் செய்கின்றனர். வேலை, உறவுகள், உடல்நலம், இரக்கம், மதம் மற்றும் ஆன்மீக சிந்தனைகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. திருமணம் ஆகாதவர்களை விட திருமணம் ஆனவர்களே அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
மேலும் இந்த ஆய்வின்படி, மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா ஆகியவை கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக இருக்கின்றன. சுகாதாரம் சம்பந்தப்பட்டவைகளில் லட்சத்தீவு, அந்தமான் நிகோபார், பஞ்சாப், மிசோரம், சிக்கிம் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.
தமிழகம் இந்த பட்டியலில் பின்தங்கிய நிலையில் 29வது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.