திமுக, அதிமுகவே தான் ஆட்சிக்கு வர வேண்டுமா? அப்போ பூனைக்கு யார் மணிக் கட்டுவது? – பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக ஆட்சி நிறை-குறைகள் இரண்டையும் கொண்டது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ராமநாதரபுரத்தில் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் மாற்று அரசியலை மக்கள் தற்போது தான் புரிந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார் திமுக, அதிமுகவே தான் ஆட்சிக்கு வர வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் மாற்று அரசியல் சவாலை யார் ஏற்பது? எனவும், பூனைக்கு யார் மணிக் கட்டுவது? என்றும் வினவினார்.
தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இருக்கிறது. இன்னும் 8 மாதங்களில் தமிழகத்தில் சட்டப்பேரவை ஆட்சிக்காலம் முடிவடைவதால், கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே பாஜக தலைமையில் தான் கூட்டணி என தமிழக பாஜக தரப்பிலிருந்து தகவல்கள் வெளியான நிலையில், அதிமுகவில் முதலமைச்சர் பழனிசாமியே அதற்கு மறுப்பு தெரிவித்து, அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை உறுதிப்படுத்தினார். இந்நிலையில் தேமுதிகவின் கருத்துகள் அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விகளை எழுப்பும் வகையில் அமைந்துள்ளது