மனைவி, மகளை கத்தியால் குத்திய போதை ஆசாமி

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் சர்வமங்களா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன்(40). இவர் மனைவி விஜயலஷ்மி (40). சீனிவாசன் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி மனைவியை மிரட்டி அடித்து உதைத்து பணம் வாங்கி மதுவாக்கி குடித்து வந்துள்ளார்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் கடந்த மூன்று மாதத்துக்கு முன்பாக தனியார் வங்கியில் பார்த்து வந்த உதவி மேலாளர் வேலையையும் இழந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இருந்து தனது மனைவியிடம் ஈஷா மையத்திற்கு போகவேண்டும் பணம் கொடு என்று தொந்தரவு செய்துள்ளார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சீனிவாசன் வீட்டிலிருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து தனது மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார். அதனை தடுக்க வந்த மகளையும் கைகளில் கன்னத்திலும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து சீனிவாசன் தப்பித்து ஓடியுள்ளார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், இரண்டு பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த சிட்லபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகிறார்கள்.