“வட இந்தியர்களின் மையமாகி வரும் தமிழகம்” தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு!!

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். மேலும், நாளுக்கு நாள் தமிழகம் வட இந்தியர்களின் மையமாகி வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “திருச்சி ரயில்வே தொழில்நுட்பப் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 540 பேரில் 15 பேர்தான் தமிழர்கள். மீதி 525 பேரும் வடஇந்தியர் மற்றும் பிற மாநிலத்தவர்! இந்தப் பணி ஆணைகளை முற்றிலும் ரத்து செய்வதுடன், மோடி ஆட்சியில் நடைப் பெற்று கொண்டிருக்கும் பணித் தேர்வு மோசடிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க தமிழக முதல்வர் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!
ரயில்வேத்துறை, வங்கித்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, உளவுத்துறை, புலனாய்வுத்துறை, தேர்தல் ஆணையம் எனத் தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அனைத்துமே வட”இந்தி”யர் மயமே! இதற்குக் காரணம் இவற்றிற்கான தேர்வுகள் அனைத்திலும் மோசடி நடப்பதே! வட”இந்தி”யர் பார்த்து பணியில் அமர்த்துவதே! இதில் கடைகோடி வேலைகளையும் அவர்கள் விடுவதில்லை.
எனவே இந்த 540 பேருக்கும் வழங்கப்பட்ட பணியமர்த்த ஆணைகளை முற்றிலுமாக தென்னக ரயில்வே ரத்து செய்ய வேண்டும்; தமிழக முதலமைச்சர் அவர்கள், இதில் தலையிட்டு, ஒன்றிய அரசைத் தொடர்பு கொண்டு, மேற்படி பொன்மலை தொழிற்சாலைக்கான பணித்தேர்வு ஆணையை முழுமையாக ரத்து செய்யவைத்து, தகுதியுள்ள தமிழ்நாட்டுப் பணியாளர்களுக்கே வேலை கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! என அறிக்கை வெளியிட்டுள்ளார்.