எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களின் சம்பளத்தில் 30% பிடித்தம்: நிதி நெருக்கடியை சமாளிக்க குஜராத் அரசு முடிவு

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், ஓராண்டு காலத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில், 30 சதவீதத்தை குறைக்க, குஜராத் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு நிதி திரட்டும் வகையில், குஜராத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஊதியத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இந்த அவசர சட்டத்திற்கு மாற்றான மசோதாவை மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் மார்ச் மாதம் வரை ஊதியம் குறைக்கப்படுவதன் மூலம், 6 கோடியே 27 லட்சம் ரூபாய் கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.
இதே போல், பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்திலும் 30 சதவீதம் பிடித்தம் செய்ய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் 30 சதவீதம் சம்பள பிடித்தம் செய்யப்படும் என்று உத்தரகண்ட் அரசு சட்டம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.