EIA வரைவு அறிக்கை தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசு மேல்முறையீடு!
![](https://thambattam.com/storage/2020/09/PTI01-09-2020_000068B.jpeg)
தமிழ் உள்பட 22 மொழிகளில் EIA வரைவு அறிக்கை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டதற்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 12 -ஆம் தேதி மத்திய அரசு “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020” என்ற பெயரில் வெளியிட்டது. இந்த புதிய சூழலியல் வரைவின்மீது மக்கள் கருத்துக்களை தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை ஆங்கிலம் உள்பட 22 மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும். அப்போது தான் கருத்துக்களை பொதுமக்கள் சரியாக கூறமுடியும் என்று கூறி சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர் விக்ராந்த் டோங்கட் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
கடந்த ஜூன் 30ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், வரைவு மீது பொதுமக்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நீட்டித்தும், 22 இந்திய மொழிகளில் இந்த அறிவிக்கையை மொழிபெயர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம், இதுதொடர்பான மனு ஒன்றை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், “ஏன் இன்னும் பிற ஆங்கிலம், இந்தி அல்லாத பிற மொழிகளில் அறிவிக்கையை மொழிபெயர்க்கவில்லை எனக் கேள்வியெழுப்பியதோடு, செப்டம்பர் ஏழாம் தேதி வரை இந்த வரைவு அறிவிக்கையை மத்திய அரசு இறுதி செய்து வெளியிடக்கூடாது” என அறிவித்தது.
இந்நிலையில், தமிழ் உள்பட 22 மொழிகளில் EIA வரைவு அறிக்கை வெளியிட உத்தரவிட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதுதொடர்பான மத்திய அரசின் மனுவில், டெல்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.