மதுரை காமராஜர் பல்கலை., தொலைநிலை கல்வி தேர்வில் முறைகேடு: 78 விடைத்தாள்களில் மோசடி செய்தது அம்பலம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தேர்வில், 78 விடைத்தாள்களில் கூடுதல் பக்கங்களை இணைத்து, மோசடி நடைபெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கம், கடந்த நவம்பர் மாதம் நடத்திய பருவத் தேர்வில் ஒரு லட்சம் பேர் தேர்வெழுதினர். இந்த விடைத்தாள் திருத்தும் பணி பொது முடக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், கேரள மாநில தேர்வு மையங்களில் இருந்து வந்த விடைத்தாள்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்தது.
அவற்றை ஆய்வு செய்ததில் 30 விடைத்தாள்களில், கூடுதலாக எழுதப்பட்ட பக்கங்களை இணைத்து மோசடி நடைபெற்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, 1 லட்சம் விடைத்தாள்களையும் பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டது. அனைத்து விடைத்தாள்களையும் பரிசோதித்ததில், மேலும் 48 விடைத்தாள்களில், முறைகேடாக கூடுதல் பக்கங்கள் இணைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இவை அனைத்தும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் எல்லையை தாண்டிய பகுதியிலிருந்து வந்த விடைத்தாள்கள் என்பது தெரியவந்துள்ளது.