“நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரம் அதன் தாக்கம் தொடரும்! மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மைய இயக்குனர்!!

நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரம் தாக்கம் தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் உருவான நிவர் புயலானது அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்க உள்ளது. இந்நிலையில் தென்மண்டல ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “நிவர் புயலானது சென்னையிலிருந்து 214 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 120 கி.மீ., கடலூரில் இருந்து 110 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி கரையை கடக்கக்கூடும். இந்த புயல் கரையை கடந்த பிறகும், அதனுடைய தாக்கம் 6 மணி நேரத்திற்கு தொடரும். பின்னர் படிப்படியாக வலுவிலக்கும்.
இதனால், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நாளை பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிககனமழையும். ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். இந்த மாவட்டங்களில் சூறாவளி காற்றானது மணிக்கு 65 கி.மீ., முதல் 70 கி.மீ., வரையிலும், ஒரு சில நேரங்களில் 75 கி.மீ., வரையிலும் வீசக்கூடும்.
திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 55 கி.மீ., முதல் 60 கி.மீ., வரையிலும் சமயங்களில் 75 கி.மீ., வரையிலும் முற்பகல் முதல் பிற்பகல் வரை வீசக்கூடும்.
சூறாவளி மற்றும் கனமழை காரணமாக குடிசை வீடுகள், விளம்பர பலகைகள் பாதிக்கப்படலாம். மின்சாரம், தொலைதொடர்பு வசதிகள் பாதிக்கும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். வாழை மரங்கள், பப்பாளி மரங்கள், தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்படலாம். அரசு மற்றும் பேரிடர் துறை சொல்வதை கேட்டு மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.