அரபு அமீரகத்தில் மறதி நோயால் தவித்த இந்தியர்.. 16 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்தாருடன் சேர்ந்தது எப்படி??

ஐக்கிய அரபு அமீரகத்தில் 16 ஆண்டுகளாக மறதி நோயால் தவித்த இந்தியர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நாட்டிற்கு திரும்பிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானாவின் கமரேட்டி மாவட்டத்தின் சிந்தமன்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லையா. இவர் கடந்த 2004ஆம் ஆண்டு கட்டுமான வேலைக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார்.அங்கு தனது முதலாளியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வெளியேறிய எல்லையா, சார்ஜாவில் தங்கி அவ்வப்போது கிடைக்கும் சிறுசிறு வேலைகளைச் செய்து வந்துள்ளார்.

அமீரகத்தில் இருக்கும்போது அம்னீசியா எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்ட எல்லையா தனது பாஸ்போர்ட்டை தவறவிட்டுள்ளார். இதனால் சொந்தநாடு திரும்ப முடியாமல் தவித்து வந்துள்ளார். மறதி நோயால் தனது குடும்பத்தாரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்த எல்லையாவை அவரது குடும்பத்தினர் கடந்த 16 ஆண்டுகளாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் அவரது மனைவி நீலா ராஜவ்வா-வின் வேண்டுகோளின் பேரில், ஹைதராபாத் பாஸ்போர்ட் அலுவலகம் எல்லையாவின் பழைய பாஸ்போர்ட் (2004) விவரங்களைத்தேடி, பாஸ்போர்ட் எண் மற்றும் பிற விவரங்களைக் கண்டறிந்தது. கண்டறியப்பட்ட பாஸ்போர்ட் விவரங்கள் துபாயின் இந்திய துணைத் தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரைக் கண்டறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இறுதியாக எல்லையாவைக் கண்டறிந்த தூதரக அதிகாரிகள் தற்காலிக பாஸ்போர்ட்டை ஏற்பாடு செய்து அவரை சொந்த நாடு அனுப்பும் நடவடிக்கையில் இறங்கினர்.இந்நிலையில் எல்லையா இறுதியாக துபாயிலிருந்து ஹைதராபாத்திற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திங்கள்கிழமை பயணமானார். ஹைதராபாத் வந்தடைந்த எல்லையாவை இந்திய அதிகாரிகள் அவரது குடும்பத்தினருடன் சேர்த்தனர்.கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை காரணமாக எல்லையா தற்போது அவரதுவீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x