சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு: ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி முன்னாள் சி.இ.ஓ., சந்தா கோச்சாரின் கணவர் கைது
சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த 2012-ம் ஆண்டில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்கியதில், தீபக் கோச்சார் ஆதாயமடைந்தார் என்று, வீடியோகான் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர் அர்விந்த் குப்தா குற்றம் சாட்டினார். இது குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் விசாரணை குழுவை வங்கி நிர்வாகம் அமைத்தது.
நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், வங்கி விதிகளை மீறி சந்தா கோச்சார் நடந்து கொண்டதும், வீடியோகான் நிறுவனத்துடன் சேர்த்து மொத்தம் 6 நிறுவனங்களுக்கு விதிகளை மீறி 1,875 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
தணிக்கை முடிவுகளில், சந்தா கோச்சார், தீபக் கோச்சார் தம்பதிக்கு தொடர்பிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, ஊழல் மற்றும் சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்குகளில், சந்தா கோச்சார், தீபக் கோச்சாரிடம், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, தீபக் கோச்சாரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டெல்லியில் உள்ள பண மோசடி தடுப்பு நீதிமன்றத்தில், அவர் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார்.