சுற்றுலாப் பயணிகளுக்காக 6 மாதங்களுக்குப் பிறகு நீலகிரியில் இன்றுமுதல் பூங்காக்கள் திறப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்ககள் சுற்றுலாப் பயணிகளுக்காக இன்று முதல் திறக்கப்பட உள்ளன. வரும் 11-ம் தேதி முதல் 7,000 மலர்ச் செடிகளின் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

கரோனா பரவல் காரணமாக சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. தற்போது பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ளதால், சுற்றுலாத்துறைக்கும் தளர்வுகள்அறிவிக்கப்படுமா என, இத்துறை சார்ந்தவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் இன்று (செப். 9) முதல் இ-பாஸ் பெற்று நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வரலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலைப் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காக்கள் மட்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படுகின்றன. இதையொட்டி, பூங்காக்களில் தூய்மைப் பணி மற்றும் முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து உதகை தாவரவியல் பூங்கா தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். நுழைவுச்சீட்டு வாங்கும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பூங்காக்குள் நுழையும்போது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்படும்.

மேலும், பூங்காவில் கூட்டம் கூடாமல் இருக்க பணியாளர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர். கண்ணாடி மாளிகைகளில் ஒரு நேரத்தில் 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இரண்டாம் சீசனுக்காக தயார்படுத்தப்பட்ட 7,000 மலர்த் தொட்டிகள் காட்சி மாடத்தில் அடுக்கி வைக்கப்படும். இந்த மலர்க் கண்காட்சியை வரும் 11-ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழலாம்” என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x