செப்., 14 – அக்., 1 வரை நடைபெறுகிறது மழைக்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 1-ம் தேதி வரை நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை இறுதியில் தொடங்கும். ஆனால் இந்தாண்டு, கொரோனா பரவல் காரணமாக மழைக்கால கூட்டத்தொடர் தள்ளிப்போனது. இந்நிலையில், வரும் 14-ம் தேதி முதல் இந்த தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழைக்கால கூட்டத்தொடர், செப்டம்பர் 14ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த விடுமுறையோ, வார விடுமுறையோ இன்றி தொடர்ச்சியாக 18 அமர்வுகள் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
எம்.பி.,க்களுக்கு சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இரு அவைகளின் அறைகள் மட்டுமின்றி பார்வையாளர் மாடங்களிலும் எம்.பி.,க்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அனைத்து எம்.பி.,க்களும் அவை நிகழ்வுகளில் பங்கேற்க வசதியாக பிரமாண்ட திரைகள், சிறப்பு ஒலி அமைப்புகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.