சொத்து தராததால் மாமனாரை அடித்துக்கொன்ற மருமகள்

அரியலூரில் சொத்தை எழுதித்தராமல் இழுத்தடித்து வந்த மாமனாரை அடித்துக் கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள காவேரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ராமலிங்கம் கடந்த 2010ஆம் ஆண்டு உயிரிழக்கவே, அவருக்கு சேர வேண்டிய சொத்தான இரண்டு ஏக்கர் நிலத்தை, ராமலிங்கத்தின் மனைவி ராணிக்கு பாகம் பிரித்து கொடுத்துவிட்டார்.
ஆனால், ராணியின் பெயரில் முறையாக பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. தனக்கு வழங்கிய நிலத்தினை தனது பெயரில் பெயர் மாற்றம் செய்து தரக்கோரி மாமனார் தங்கசாமியிடம் மருமகள் ராணி தொடர்ந்து கேட்டுவந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கந்தசாமி கொட்டகையில் படுத்திருந்தபோது அங்கு வந்த மருமகள் ராணி, அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தங்கசாமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செந்துறை போலீசார், ராணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.