கடன் மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடிக்கு ஆதரவாக வாதாட போகும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி!

பல ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டு இங்கிலாந்து சிறையில் உள்ள வைர வியாபாரி நிரவ் மோடிக்கு ஆதரவாக, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ ஆஜராகிறார்.
மும்பையை சேர்ந்தவர் வைர வியாபாரி நிரவ் மோடி (49). பஞ்சாப் நேஷனல் வங்கியில், 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இவ்விஷயம் வெளிச்சத்திற்கு வந்ததும் வெளிநாடு தப்பினார். ஓராண்டுக்கும் மேல் தலைமறைவாக இருந்த அவரை, கடந்த ஆண்டு, மார்ச் 19ல் லண்டனில் இன்டர்போல் கைது செய்து அந்நாட்டிலுள்ள ‘வாண்ட்ஸ்வொர்த்’ சிறையில் அடைத்தனர். அவரை இந்திய சிறைக்கு நாடு கடத்தும் வழக்கு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நிரவ் மோடிக்கு ஆதரவாகவும், அவர் நாடு கடத்தப்படப்படுவதற்கு எதிராகவும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ இன்று வாதாடுகிறார். காணொளி மூலம் பங்கேற்று தன் வாதங்களை முன் வைக்கிறார். ஏற்கனவே அவர் மீதான குற்றவழக்கின் தகுதி குறித்து தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
புதனன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் இந்தியாவில் உள்ள சிறை நிலைமைகள் மற்றும் நீரவ் மோடியின் மன ஆரோக்கியம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது சிறையிலிருந்து காணொளி வாயிலாக நிரவ் மோடி விசாரணையில் பங்கேற்றார். அவர் நாள் முழுக்க அசைவின்றி உட்கார்ந்தார். அதை கவனித்த நீதிபதி, விசாரணையை நிறுத்தி வீடியோ பாஸ் செய்யப்படுகிறதா என கேட்டார். பின்னர் அவ்வப்போது அசைவுடன் இருக்குமாறும், அப்போது தான் இணைப்பில் இருக்கிறீர்கள் என தெரியும் என்று கூறியுள்ளார்.