“தற்கொலை என்பது தீர்வல்ல, நீட் ஒரு தேர்வே அல்ல!” ஜோதிஸ்ரீ தற்கொலை குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை!

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி ஜோதிஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட சபவத்தை அடுத்து தற்கொலை என்பது தீர்வல்ல, நீட் ஒரு தேர்வே அல்ல என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது.இதனிடையே மதுரையில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் முருக சுந்தரம், இவரது மகள் ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வை எழுதி வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை, ஆனால் மாணவி தொடர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ஜோதி ஸ்ரீ துர்கா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை வரை தேர்வுக்கு படித்துள்ளர். தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்ப்பார்த்தீங்க; ஆனா எனக்குதான் பயமா இருக்கு” என்று ஜோதிஸ்ரீ துர்கா பேசிய ஆடியோ, நீட் தேர்வின் கோர முகத்தை காட்டுகிறது. ஒரு தேர்வு மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது. மீண்டும் சொல்கிறேன்; தற்கொலை என்பது தீர்வல்ல. நீட் தேர்வு என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை, மீண்டும் சொல்கிறேன்.” இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.