மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.1.51 லட்சம் கோடி! நிதி இணையமைச்சர் தகவல்!

2020-21-ல் மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.1.51 லட்சம் கோடி என்று நாடாளுமன்றத்தில் நிதி இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
2020-21-ல் அளிக்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவுக்கு ரூ.22,485 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.13,763 கோடியும், உ.பி.க்கு ரூ.11,742 கோடியும் குஜராத்துக்கு ரூ.11,563 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.11,269 கோடியும் நிலுவையில் உள்ளன. மேற்கு வங்கத்துக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.7,750 கோடி, கேரளாவுக்கு ரூ.7,077 கோடி, பஞ்சாபுக்கு ரூ.6,959 கோடி, டெல்லிக்கு ரூ.6,931 கோடி ராஜஸ்தானுக்கு ரூ.6,312 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.5,424 கோடி மற்றும் சத்திஸ்கருக்கு ரூ.2,827 கோடி அளிக்க வேண்டியுள்ளது.
2020-21இல் 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை மொத்தமாக ரூ.1,51,365 கோடியாக உள்ளது என்று அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளித்த பதிலில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கும் போது ஜிஎஸ்டி இழப்பீடு விவகாரம் குறித்து 41வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆகஸ்ட் 27ம் தேதி விவாதிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.2.35 லட்சம் கோடி ஜிஎஸ்டி வருவாய் இழப்பை எதிர்நோக்குகின்றன. இதில் மத்திய அரசின் கணக்கீட்டின்படி ரூ.97,000 கோடி இழப்பு ஜிஎஸ்டி அமலாக்கத்தினாலும், மீதி 1.38 லட்சம் கோடி இழப்பு கோவிட் 19-னால் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
2020-21 மத்திய பட்ஜெட்டில் ஜிஎஸ்டி வரி வசூல் வருவாய் ரூ.6,90,500 கோடி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது என்றார் அனுராக் தாக்கூர்.
ஆனால் ஆகஸ்ட் 2020-வரை நிகர ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,81,050 கோடிதான்.
இந்த இழப்பை ஈடுகட்ட மாநிலங்களுக்கு 2 தெரிவுகள் வழங்கப்பட்டன. அவை, ரூ.97,000 கோடியை ஆர்பிஐ-யின் சிறப்பு சாளர வசதி மூலமாகவோ அல்லது ரூ.2.35 லட்சம் கோடியை வெளியிலிருந்து கடன் வாங்கியோ ஈடுகட்டலாம் என்று மத்திய அரசு இரண்டு தெரிவுகளை வழங்கியது.