பையை திறந்து பார்த்த இந்தியருக்கு கிடைத்த கட்டி கட்டியாக தங்கம்-பணம்! அதன் பின் அவர் செய்த நெகிழ்ச்சி செயல்

துபாயில் தங்கம் மற்றும் பணத்துடன் கிடந்த பையை கண்டுபிடித்து கொடுத்த இந்தியர், அந்த பை எங்கு கிடைத்து? நடந்தது என்ன என்பது குறித்து கூறியுள்ளார்.
துபாயில் வசித்து வரும் ஜேம்ஸ் குப்தா என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன் கீழே கிடந்த பை ஒன்றை போலிசாரிடம் ஒப்படைத்தார். அந்த பையின் உள்ளே, தங்கம் மற்றும் பணம் இருந்த போதும், அதை அப்படியே நேர்மையாக எடுத்து வந்து ஒப்படைத்ததற்காக அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஆனால், அவர் இந்த பையை எங்கிருந்து எடுத்தார்? நடந்தது என்ன? என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேம்ஸ் குப்தா இந்தியாவின் கொல்கத்தாவை சேர்ந்தவர். இவர் மனைவி அப்பருப்பா கங்குலியுடன் துபாயில் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு மூன்று வயதில் குழந்தை உள்ளது.
இந்நிலையில், ஜேம்ஸ் குப்தா சம்பவ தினத்தன்று சலூன் கடைக்கு காரில் சென்றுள்ளார்.
அப்போது அவர் மீண்டும் கார் நிறுத்திய இடத்திற்கு வந்த போது, அவர் காரின் முன்பகுதியில் பை ஒன்று கிடந்துள்ளது. இதைக் கண்ட அவர், அந்த பைக்கு சொந்தக்காரர் எப்படியும் வருவார் என்று சுமார் 30 நிமிடம் அங்கு காத்திருந்துள்ளார். ஆனால் அவர் வரவில்லை.
அதன் பின் அந்த பையின் உள்ளே ஏதேனும் விபரம் இருக்குமா என்று பார்த்த போது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் பை உள்ளே அமெரிக்க டொலர்கள், தங்கங்கள் மற்றும் மூன்று பாஸ்போர்ட்டுகள் இருந்துள்ளது.
இது குறித்து உடனடியாக தன் மனைவிக்கு அவர் போன் செய்து பேச, அவர் உடனே அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லுங்கள், இது கடவுள் நம்மை சோதிக்கும் நேரம் என்று கூறியுள்ளார். ஏனெனில், சமீபத்தில் தான் ஜேம்ஸ் குப்தா தன்னுடைய வேலையை இழந்துள்ளார். மனம் மாறிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் உடனடியாக காவல்நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.

அந்த பையை எடுத்து சென்று போலிசாரிடம் ஒப்படைக்கும் போது, அதில் இருந்து ஏதேனும் பணம் மற்றும் நகை காணவில்லை என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம் மட்டும் தனக்குள் இருந்ததாகவும், ஆனால் அப்படி எதுவும் சொல்லவில்லை என்று ஜேம்ஸ் குப்தா கூறியுள்ளார்.
இந்த பையை ஒப்படைத்த அடுத்த நாள், அந்த பைக்கு சொந்தக்கார நபர் உடனடியாக ஜேம்ஸ் குப்தாவை போனில் தொடர்பு கொண்டு தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். பையை பறிகொடுத்த நபர் அமெரிக்கா சென்றுவிட்டதால், ஜேம்ஸ் குப்தாவை நேரில் பார்க்க வர முடியவில்லை.
இருப்பினும் அவருடைய நேர்மையை பாராட்டி, தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார். அதன் பின் ஜேம்ஸ் குப்தாவின் நேர்மையை பாராட்டு அவரை போலீசார் சிறந்த குடிமகன் சான்றிதழ் வழங்கி கவுரத்தனர்.
மேலும், இந்த சம்பவத்திற்கு பின் வேலை இழந்து தவித்து வந்த அவருக்கு வங்கி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. இவரின் இந்த செயலைக் கண்டு இந்தியாவில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் போன் செய்து வாழ்த்துவதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இவர் கண்டுபிடித்த பையில் 10.5 லட்சம் ரூபாய் பணமும், 40 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட நகைகளும், மூன்று பாஸ்போர்ட்டும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.