“இவர்களுக்கு ஆண்மையை நீக்கி தூக்கிலிட வேண்டும்…” இம்ரான் கான் கொந்தளிப்பு

பாகிஸ்தானில் இரு குழந்தைகளின் தாய் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி வரும் நிலையில், இது போன்ற குற்றவாளிகளுக்கு தூக்கு மற்றும் ஆண்மை நீக்கமே சரியான தண்டனை என்று பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன், பாகிஸ்தானின் லாகூரில் இருந்து, இரு குழந்தைகளுடன் தாய் ஒருவர் அருகில் இருக்கும் மாநகருக்கு காரில் சென்றுள்ளார். அப்போது காரில் எரிபொருள் திடீரென்று தீர்ந்துவிட்டதால், உடனடியாக அவசர போலிசாருக்கு உதவி கேட்டுவிட்டு குழந்தைகளுடன் காரில் உட்கார்ந்திருந்தார். அப்போது, அப்பகுதி வழியே வந்த இரண்டு பேர் காரின் உள்ளே இருந்த பெண்ணை வெளியே இழுத்து போட்டு, அவரை துப்பாக்கி முனையில் குழந்தைகள் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கியுள்ள பொதுமக்கள், பெண்களை வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளைப் பொதுஇடத்தில் தூக்கிலிட வேண்டும் மற்றும் அஜாக்கிரதை அதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் போராடி வருகின்றனர்.

போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு டி.என்.ஏ மாதிரிகளை கைப்பற்றி, அந்த இடத்தில் இருந்த நபர்களை அடையாளம் காணும் வகையில் செல்போன் நெட்வொர்க்குகளிலிருந்து ஜி.பி.எஸ் தரவையையும் கைப்பற்றி குற்றவாளிகளைத் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளனர். மற்றொருவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், இது போன்ற வன்கொடுமை சம்பங்களில் ஈடுபடுபவர்களைப் பொதுஇடத்தில் தூக்கிலிடுவது அல்லது ஆண்மை நீக்கம் செய்வதே தகுந்த தண்டனையாக அமையும்.
அதேநேரம், பொது இடத்தில் தூக்கிலிடுவது, ஆண்மை நீக்கம் போன்ற தண்டனைகள் மனித உரிமை மீறல் விஷயமாக பார்க்கப்படுகின்றன.

இதன் காரணமாக, ஐரோப்பிய யூனியன் பாகிஸ்தானுக்கு அளித்துள்ள வர்த்தகத்துக்கு உகந்த நாடு என்ற அந்தஸ்துக்கு பாதிப்பு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறியதால் அந்த முடிவை மாற்றிக் கொண்டேன். இருப்பினும் தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.