எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு சீன ராணுவம் தான் காரணம்! இந்தியா பதிலடி!

இந்திய – சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் சீன ராணுவ வீரர்கள்தான் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர், நமது வீரர்கள் துப்பாக்கியால் சுடவில்லை என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, இந்திய – சீன கட்டுப்பாட்ட எல்லைக் கோடு பகுதியை அத்துமீறி தாண்டி வந்த இந்திய ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு விளக்கம் அளித்திருக்கும் இந்திய ராணுவம், இந்திய ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதிக்குள் அத்துமீறி நுழையவோ, துப்பாக்கிச் சூடு நடத்தவோ இல்லை.
நமது வீரர்கள் ஒரு போதும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியை கடந்து செல்லவில்லை. படைக்குறைப்பு மற்றும் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையில் தான் நாம் கவனம் செலுத்துகிறோம். ஆனால் அதற்கு எதிர்மாறாக சீன ராணுவம், படைகளை குவிப்பது, அத்துமீறி நுழைய முற்படுவது, பதற்றத்தை ஏற்படுத்தும் போன்ற செயல்களில் ஈடுபடுகிறது.

செப்டம்பர் 7-ம் தேதி இரவு நமது பாதுகாப்பு முகாமுக்கு மிக நெருக்கமாக சீன ராணுவ வீரர்கள் வர முனைந்த காரணத்தால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது, ஒரு தரப்பு சீன ராணுவ வீரர்களே வானத்தை நோக்கி துப்பாக்கியால் சில சுற்றுகளை சுட்டனர்.
கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் சீன ராணுவ வீரர்கள், இந்திய வீரர்களின் கோபத்தைத் தூண்டும் வகையில் நடந்துகொண்டபோதிலும், நமது படைகள் மிகுந்த கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தன. முதிர்ச்சியான, பொறுப்பான முறையில் நடந்து கொண்டன. அமைதி மற்றும் அமைதியைப் பேணுவதற்கு நமது படைகள் கடமைப்பட்டுள்ளன. ஆனால் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாக்க, எந்த தியாகத்தையும் செய்ய உறுதியாக இருக்கிறார்கள் என்றும் இந்திய ராணுவம் குறிப்பிட்டுள்ளது.