‘முடிஞ்சா பிடிச்சி பாரு’ என்று கூவத்தில் காவல்துறைக்கு கூத்துக் காட்டிய குடிமகன்..!

சென்னையில் மதுபோதையில் கூவத்தில் குதித்து போலீஸாருக்கு குடிமகன் ஒருவர் போக்கு காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் காலையிலேயே மது அருந்திவிட்டு முழு போதையில் சுற்றிய ஆசாமி ஒருவர் புதுப்பேட்டை பாலத்திலிருந்து கூவம் ஆற்றிற்குள் குதித்துள்ளார். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த போலீஸார் அவரை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால் மது போதையில் அந்த ஆசாமி கூவம் ஆற்றிற்குள்ளேயே நீந்துவதும், உள் நீச்சல் போடுவதுமாக இருந்துள்ளார்.
போலீஸார் கரைக்கு வர வலியுறுத்தியும், அந்த ஆசாமி வராததால் படகு ஒன்றை தயார் செய்து கொண்டு ஆற்றிற்குள் அவரை மீட்க சென்றுள்ளனர். ஆனால் அவர்களை கண்டதும் வேகமாக நீந்த தொடங்கிய அந்த ஆசாமி 1 கி.மீ தூரம் நீந்தி சென்று சிந்தாதிரிப்பேட்டை அருகே கரையேறியுள்ளார்.
மது போதையில் ஆடையில்லாமல் இருந்த அவருக்கு துணியை போர்த்தி போலீஸார் அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை வேடிக்கை பார்க்க அங்கு பெரும் கூட்டம் கூடியதால் சிறிது நேரத்திற்கு பெரும் பரபரப்பு எழுந்தது.