நாகூர் கோவில் குளத்தில் விஷம்… தங்கள் உயிரை ஈந்து மனித உயிர்களை காப்பாற்றிய மீன்கள்..!

நாகூர் நாகநாத சுவாமி கோயில் குளத்தில் மீன்கள் இறந்து மிதந்ததையடுத்து, குளத்து நீரில் விஷம் கலந்தவர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் நாகூரில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த சிவன் கோயிலில் ராகு பெயர்ச்சி, சிவராத்திரி, பிரதோஷம் ஆகியவை சிறப்பாக நடைபெறும். இந்த கோயிலுக்குச் சொந்தமான குளம் ஒவ்வொரு ஆண்டும் ஏலம் விடப்படுவது வழக்கம். ஏலம் எடுப்பவர்கள் குளத்தில் வளரும் மீன்களைப் பிடித்து விற்பனை செய்வார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு குளம் ஏலம் விடப்படவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் குளம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் குளம் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் குறைவான தொகைக்கு ஏலம் போனதால், அந்த ஏலம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குளிப்பதற்காக நேற்று குளத்துக்கு சென்ற அப்பகுதி மக்கள், குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிலர் குளத்து நீரை அள்ளி முகர்ந்து பார்த்தபோது, விஷ ரசாயனம் கலந்திருப்பது போன்ற வாடை அடித்துள்ளது. மேலும், குளத்து நீர் ஆங்காங்கே நிறம் மாறி இருந்தது.

உடனே, இதுகுறித்து நாகூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து அங்கு வந்த போலீஸார் குளத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கோயில் குளத்தின் ஏலத்தை ரத்து செய்ததால் ஆத்திரமடைந்த நபர்கள் குளத்தில் விஷம் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x