“நீங்க கொஞ்சம் ShutUp பண்ணுங்க!” ஓவியா ஸ்டைலில் தன் நாட்டு மக்களை எச்சரித்த நெதர்லாந்து பிரதமர்!

விளையாட்டு போட்டியை நேரில் காணும் ரசிகர்கள் வாயை மூடிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும் என நெதர்லாந்து பிரதமர் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு பல்வேறு நாடுகளில் விளையாட்டு போட்டிகள் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் நெதர்லாந்தில் கால்பந்து விளையாட்டு போட்டி மீண்டும் தொடங்கியுள்ளது.
ஆனால் குறைவான பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. போட்டியை கண்டு களிக்கும் ரசிகர்கள் ஆர்வத்தில் தங்கள் இருக்கையை விட்டு எழுந்து ஒன்றாக நின்று பாட்டு பாடி மகிழ்கிறார்கள். இதற்கு அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், ‘நீங்கள் மைதானத்தில் அமர்ந்திருக்கும் போது வாயை மூடிக் கொண்டு அமைதியாக இருங்கள். யாரும் தேவையில்லாமல் சத்தம் போட வேண்டாம். உங்களால் இது முடியும். ரசிகர்களின் நடவடிக்கை முட்டாள்தனமாக இருக்கிறது. இதே நிலைமை நீடித்தால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சிரமம்’ என்று எச்சரித்துள்ளார்.
நெதர்லாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதல்முறையாக நேற்று 2,000 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசு தெரிவித்தது. அங்கு இதுவரை 95,995 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், 6,281 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.