தனியார் மயத்தால் ரயில்வே ஊழியர்களை பணி நீக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு காரணமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக எம்.பி. கனிமொழியின் எழுத்துப்பூர்வ கேள்விக்கு அவர் அளித்த பதில்:
தேர்ந்தெடுக்கப்பட்ட 12 தடங்களில் தனியாரிடமிருந்து பயணிகள் ரயில்கள் இயக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தனியார்மயமாக்குதல் காரணமாக ரயில்வே ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை. தற்போது உள்ள பயணிகள் ரயில் சேவைகள் எதுவும் பாதிப்புக்கு உள்ளாகாது.
மேலும் தனியார் இயக்கும் ரயில்களுக்கான ஓட்டுனர் மற்றும் காப்பாளர்களை ரயில்வே துறையே வழங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.