வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயமாக்கக் கோரி வழக்கு..

உருமாற்றம் பெற்ற கொரோனா பரவும் சூழலில் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதை அடுத்து, கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கடந்த 27ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் 16 கோடியே 81 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 97 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு, 2 லட்சத்து 78 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 622 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், உருமாற்றம் பெற்ற கொரோனா பிரிட்டனில் பரவத் துவங்கியுள்ளது. மிக வேகமாகவும், எளிதாகவும் பரவும் இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்கள் டிசம்பர் 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் சீனாவில் இருந்து வரும் பயணிகள் மட்டும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், பிற நாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமும் கொரோனா பரவியதால், பிரிட்டன் மட்டுமல்லாமல் அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சோதனைக்கு உள்ளாக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் செய்த அதே தவறை மத்திய அரசு தற்போதும் செய்வதாக புகார் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு நாட்களில் பிரிட்டனில் இருந்து வந்த ஆயிரத்து 88 பயணிகளை கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது எனக் கூறியிருந்தார்.மேற்கத்திய நாடுகளைப் போல இன்னொரு ஊரடங்கை அறிவித்தால் மிக மோசமான நிலை ஏற்படும் எனவும், அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சியை மக்கள் விரும்ப வில்லை எனவும் மனுவில் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து, விமானம், கப்பல் மூலம் வரும் பயணிகளை கண்டிப்பாக 14 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்த வேண்டும் எனவும், ஐந்தாவது நாள் கொரோனா பரிசோதனை செய்து, அறிகுறி இல்லாவிட்டால் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.