12ம் வகுப்பு முடித்தால் 25 ஆயிரம், பட்டம் பெற்றால் 50 ஆயிரம்… தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிதிஷ்குமார்!!

மாணவிகள் 12ம் வகுப்பு முடித்தால் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும், பட்டம் பெற்றால் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் பீகார் முதல்வர் அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3ம் தேதி மற்றும் 7ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தேர்தல் அறிக்கை குறித்து விளக்கிய பீகார் முதல்வர் நிதீஷ் குமார், மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு, தான் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் கட்டாயம் நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளார். அதாவது, பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், பட்டப் படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் நீர்ப் பாசன வசதி செய்து தரப்படும் எனவும் அனைத்துக் கிராமங்களிலும் சோலார் தெரு விளக்குகள் அமைத்துத் தரப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாமல், கிராமப் புறங்களில் கழிவு மேலாண்மைத் திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
அனைத்துக் குடிமக்களுக்கும் அரசு வேலை அளிப்பது சாத்தியமில்லை என்றாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாபெரும் வேலைவாய்ப்புத் திறன் மையங்கள் அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் தேர்தலில் தாம் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தபிறகு கட்டாயம் நிறைவேற்றப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.