சென்னையில் அடுத்தடுத்து மோட்டார் பைக்குகளை திருடிய அரசு பேருந்து நடத்துனர்!

சென்னையில் தொடர்ந்து 9 இருச்சக்கர வாகனங்களை திருடிய அரசு பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவேற்காடு வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி முன் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதாக போலீசுக்கு புகார் கிடைத்தது. கண்காணிப்பு கேமிராக்களை ஆராய்ந்த போலீசார், அனைத்து இருசக்கர வாகனங்களையும் ஒரே நபர் திருடியது தெரியவந்தது.
திருடு போன இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த வந்தவாசியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர், போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தபோது, இருசக்கர வாகனங்கள் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் கைதான பாரதிராஜா அண்ணாநகர் பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வந்துள்ளார். இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்ய இருந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 9 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.