“இன்னும் எத்தனை நாள் மெகபூபாவை காவலில் வைக்க போகிறீர்கள்?” கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்!!

மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தியை இன்னும் எத்தனை நாள் தடுப்புக்காவலில் வைக்க போகிறீர்கள் என காஷ்மீர் அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சிறப்பு சட்டப்பிரிவு 370 ஐ மத்திய அரசு ரத்து செய்ததுடன், காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்தது. இதற்கு அங்கு எதிர்ப்பு கிளம்பியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், மெகபூபா முப்தியை விடுதலை செய்ய வேண்டும் எனுக்கூறி அவரது மகள் இல்திஜா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி, சஞ்சய்கிஷன் கவுல் மற்றும் ஹரிகேஷ்ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இல்திஜா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நித்யா ராமகிருஷ்ணன், குடும்பத்தினரை சந்திக்க மெகபூபா முப்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீதிபதி கவுல் கூறுகையில், “மெகபூபா முப்தியை இன்னும் எத்தனை நாள் தடுப்பு காவலில் வைக்க போகிறீர்கள். எந்த உத்தரவின் கீழ் அவர் காவலில் உள்ளார். தடுப்பு காவலில் எத்தனை நாள் வைக்க முடியும். ஒரு வருடத்தை தாண்டி அதனை நீட்டிக்க முடியுமா” எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, காஷ்மீர் மாநில அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், மெகபூபா முப்தியின் தடுப்பு காவலை இன்னும் எத்தனை நாள் நீட்டிக்க போகிறீர்கள் எனக்கேள்வி எழுப்பியதுடன், அது குறித்து பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர். ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என நீதிபதிகளிடம் துஷார் மேத்தா தெரிவித்தார்.