மத்திய அரசின் நெருக்கடியால், இந்தியாவில் தனது செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அம்னெஸ்டி!!

இந்தியாவில் தனது அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்துவதாக அம்னெஸ்டி சா்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல், உலக அளவில் மனித உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் நிறுவனமாக உள்ளது. உலக மனித உரிமைகள் ஆணையம் போன்று இந்த அமைப்பும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த அமைப்பு இந்தியாவில் தங்களின் நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதற்கு காரணமாக “இந்திய அரசின் எல்லை மீறிய செயலே” என்று குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் அம்னஸ்டி-ன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், பணியாளர்களை பணிநீக்கம் செய்ய கட்டாயப்படுத்துவதாகவும், அனைத்து பிரசாரம் மற்றும் ஆராய்ச்சி பணிகளை தடுப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைப்பினா் வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் செய்யும் மனித உரிமைகள் பணிகள் மற்றும் நாங்கள் எழுப்பும், டெல்லி கலவரம், ஜம்மு-காஷ்மீர் பிரச்சனைகள் தொடர்பான கேள்விகளுக்கு அரசு பதிலளிக்க விரும்பவில்லை. அம்னெஸ்டி அமைப்பின் அனைத்து இந்திய வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பழிவாங்கும் நடவடிக்கையாக வங்கிக் கணக்குகளை இந்திய அரசு முடக்கியுள்ளது. இதனால் எங்கள் அமைப்பு சாா்பில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து மனித உரிமை நடவடிக்கைகளும் நிறுத்தப்படுகின்றன” என்று தெரிவித்தது.