ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முக்கிய பரிசோதனை இந்தியாவில் இன்று துவங்குகிறது!

ஆக்ஸ்போர்டு தடுப்பூசியான கோவிஷீல்டின் முக்கியமான மனித பரிசோதனை இன்று புனேவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் தொடங்க உள்ளது.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க சீரம் இந்தியா நிறுவனம், அஸ்ட்ராஜெனகா என்ற இங்கிலாந்து, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியர்களுக்கு முதலில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி தான் கிடைக்கும். இந்தாண்டு இறுதியில் இவை சந்தைக்கு வரும் என ஏற்கனவே செய்தி வெளியாகியிருக்கிறது. ஏனென்றால் பரிசோதனைகளில் இத்தடுப்பூசி தான் முன்னணியில் உள்ளது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளுக்கு இந்திய பொது மருந்து கட்டுப்பாட்டாளர் ஆக., 3 அன்றே ஒப்புதல் அளித்தார்.

இன்று புனேவில் உள்ள பாரதி வித்யாபீட மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் கட்ட மனித பரிசோதனை துவங்க உள்ளது. இந்த சோதனையின் மூலம் உலகத்தரம் வாய்ந்த கொரோனா தடுப்பு மருந்தை நாட்டு குடிமக்களுக்கு எங்களால் கொடுக்க முடியும் என்று நம்புகிறோம் என்று சீரம் இந்தியா நிறுவன கூடுதல் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் கூறியுள்ளார். முன்னர் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட முதல் இரண்டு கட்ட சோதனைகளில், கோவிஷீல்டு தடுப்பூசி நோயை எதிர்த்துப் போராடும் தன்மையுடையது என முடிவுகள் வந்தன.