உ.பியில் மீண்டும் ஒரு நிர்பயா… இரவோடு இரவாக பெண்ணின் உடலை தகனம் செய்த போலீஸார்!

நான்கு உயர் சாதி ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நேற்று உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை காவல்துறையினர் அவசர அவசரமாக எரித்து தகனம் செய்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் செப்டம்பர் 14 ஆம் தேதி நான்கு பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 19 வயது பட்டியலின இளம்பெண், கடுமையான உடல்நல பாதிப்பால் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அந்த இளம்பெண் மரணமடைந்தார்.

அவரது மரணம் குறித்த செய்தி பரவியதால், டெல்லி மற்றும் ஹத்ராஸிலும் இந்தியாவின் முக்கிய அரசியல்வாதிகள், விளையாட்டு மற்றும் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமும் எதிர்ப்புகள் வெடித்தன. உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கோரி அனைவரும் குரல்கொடுத்தனர்.

நேற்று இரவு கடும் காவல்துறை பாதுகாப்புடன் அந்த பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர். அதன் பின்னர் குடும்ப உறுப்பினர்கள் வருவதற்கு முன்னதாக ஹத்ராஸ்க்கு அந்த பெண்ணின் உடலை உத்தரபிரதேச காவல்துறையினர் எடுத்துச் சென்றனர்.

“இறந்த என் சகோதரியின் உடலை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தகனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையிலிருந்து எனது தந்தை ஹத்ராஸை அடைந்ததும், அவரை உடனடியாக தகனத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்” என்று அந்தப் பெண்ணின் சகோதரர் தெரிவித்தார்.

அந்த பெண்ணின் உடல் நள்ளிரவில் சொந்த கிராமத்தை அடைந்து இன்று அதிகாலை 3 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. கிராமவாசிகள் அந்த பெண்ணின் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்ல விரும்புவதாகக் கூறினர். ஆனால், நிர்வாகம் விரைவாக தகனம் செய்ய அழுத்தம் கொடுத்தது. ஆம்புலன்ஸ் செல்வதற்கான பாதை தடைசெய்யப்பட்டு கடைசியில் கிராமத்தில் தகனம் நடந்தது.

இது குறித்து உயிரிழந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கூறுகையில், “அவர்களுக்கு என்ன வேண்டும், இது என்ன மாதிரியான அரசியல். இறந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது போன்ற சீரற்ற அறிக்கைகளை அவர்கள் தருகிறார்கள். அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் இந்த வழக்கைத் முடிப்பதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள்” என்று கூறினார்.

ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர், ‘உடல் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள பூல்கரி கிராமத்தை அடைந்த பின்னர் வழக்கம் போல் குடும்பத்தின் விருப்பப்படி அனைத்து நடைமுறைகளும், தகனமும் நடந்தது. தற்போது கிராமத்தில் நிலைமை அமைதியாக உள்ளது’ என கூறினார்.

ஆனால், இறந்த பெண்ணின் உடலை அவரது பெற்றோரின் அனுமதியில்லாமல், கட்டாயப்படுத்தப்பட்டு, முறையற்ற வகையில் காவல் துறையினரால் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை. மேலும் பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்க ஹத்ராஸ் கிராமத்தில் அதிகளவிலான போலீஸ் படை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தேசம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x