உ.பி. யின் ஹத்ராஸில் ராகுல் காந்தியின் வருகையை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பித்த யோகி ஆதித்யநாத் அரசு!!

ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பெண்ணின் கூட்டு பாலியல் வன்கொடுமை மரணத்தைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹத்ராஸ் சம்பவத்தில் நிர்பயா வழக்கைப் போலவே மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். உத்தரபிரதேச போலீஸ் அந்த பெண்ணின் குடும்பத்தினரின் சம்மதத்துடன்தான் உடலை எரித்ததாகக் கூறினாலும், சில வீடியோக்கள் போலீஸாரின் அராஜகத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன் பதவியை ராஜினாமா செய்யும்படி நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு ஒன்று மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணையில் இறங்கியுள்ளதால், சம்பவம் நடந்த கிராமத்தைச் சுற்றி 1.5 கிமீ தூரத்திலேயே மீடியாக்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை இன்று சந்திப்பதாகக் கூறியிருந்தார். தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அவருடன் செல்வதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், ஹத்ராஸ் மாவட்டத்திற்குள் நுழைய தற்போது தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட மாஜிஸ்திரேட் பி.லக்ஷ்கர் கூறுகையில், “ஹத்ராஸ் மாவட்டத்தின் எல்லைகள் மூடப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு மேல் யாரும் கூடக்கூடாது. சிறப்பு விசாரணை குழு இன்று அந்த பெண்ணின் குடும்பத்தை சந்திக்கவுள்ளது. ஆனால் ஊடகங்களுக்கு அனுமதி கிடையாது. பிரியங்கா காந்தி இங்கு வருவதைப் பற்றி இதுவரை தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை”எனக் கூறியுள்ளார்.