ஆகஸ்ட் 4, 2019-க்கு முந்தைய நிலை காஷ்மீரில் திரும்பும் – தலைவர்கள் கூட்டறிக்கை!

ஆகஸ்ட் 4, 2019-க்கு முன் ஜம்மு காஷ்மீர் எப்படி இருந்ததோ அந்த நிலை திரும்பும் வகையில் எங்கள் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் இருக்கும் என காஷ்மீரின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது மற்றும் 35ஏ சட்டப்பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ல் மத்திய அரசால் நீக்கப்பட்டது. மாநிலமாக இருந்த காஷ்மீரை, காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றினர். இந்நடவடிக்கைக்கு பின்னர் காஷ்மீர் மாநில தலைவர்கள் பல மாதங்களாக சிறை வைக்கப்பட்டனர். தகவல் தொடர்புகள் முடக்கப்பட்டன. ஒராண்டாகியும் பெரிய மாற்றமில்லை.
இந்நிலையில் இன்று (ஆக., 22) தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா, பி.டி.பி தலைவர் மெஹபூபா முப்தி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் குலாம் அகமது மிர் உட்பட 6 கட்சிகளின் தலைவர் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், குப்கர் பிரகடனத்தின் உள்ளடங்களை ஏற்றுக்கொண்டு நாங்கள் இணைந்துள்ளோம். சட்டப்பிரிவு 370 மற்றும் 35 ஏ, ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு, மாநில அந்தஸ்து ஆகியவற்றை மீட்டெடுக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
வன்மம் கொண்ட குறுகிய பார்வை மற்றும் அரசியலமைப்பற்ற நடவடிக்கையால் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு அதன் அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த முடியாததாக மாற்றியுள்ளனர். ஆகஸ்ட் 4, 2019-க்கு முன் ஜம்மு காஷ்மீர் எப்படி இருந்ததோ அந்த நிலை திரும்பும் வகையில் எங்கள் அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் இருக்கும் என்பதை மக்களுக்கு உறுதியுடன் கூறுகிறோம். என்று தெரிவித்துள்ளனர்.