பள்ளிகள் திறந்த சில நாட்களில் 27 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!!

ஆந்திராவில் இரண்டு பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஆறு மாதங்களாக நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன. இருப்பினும் சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த வழிகாட்டுதலின்படி மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டத்திலுள்ள இரண்டு பள்ளிகளில் பெற்றோர் அனுமதியுடன் நடந்த முறைசாரா வகுப்புகளில் பங்கேற்ற 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மற்ற மாணவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு அறிகுறிகள் இல்லாத நிலையில், அவர்களுடன் இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சக மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவில் பள்ளிகள் திறந்த ஒரு சில நாட்களில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.