“சுதந்திரத்தில் சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து சறுக்கி வருகிறது” – பிரசாந்த் பூஷன் மீண்டும் சர்ச்சை கருத்து

உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள பிரசாந்த் பூஷன், தற்போது மீண்டும் போராட்டம் பற்றிய தீர்ப்புக்கு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
டில்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, முன்னாள் தலைமை நீதிபதிகளை விமர்சித்ததற்காக அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டார்.அதில் அவருக்கு தண்டனையாக ரூ.1-யை அபராதமாக செலுத்தும்படி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இந்த நிலையில் புதனன்று பொது இடங்களில் போராட்டம் நடத்துவது தொடர்பான மனுவை விசாரித்த, உச்சநீதிமன்றம் “சாலைகள் போன்ற இடங்களில் கூடி போராட்டம் நடத்த சட்டப்படி அனுமதி கிடையாது. இது போன்ற போராட்டங்கள் நடக்கும்போது, நீதிமன்றங்களின் உத்தரவுக்காக காத்திருக்காமல், போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்” என அதிரடி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்காக மீண்டும் உச்சநீதிமன்றத்தை விமர்சித்துள்ளார் பிரசாந்த் பூஷன்.
அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: மும்பை ஐகோர்ட், ரியா சக்ரபார்த்திக்கு ஜாமீன் வழங்கும்போது போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறையினரை கண்டித்தது. அதே நாளில் சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், போலீசாரால் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் கூட போராடும் உரிமையை கட்டுப்படுத்தியுள்ளது. சுதந்திரத்தில் சுப்ரீம் கோர்ட் தொடர்ந்து சறுக்கி வருகிறது. அதேசமயம் ஐகோர்ட்டுகள் நீதியின் கொடியை உயர்த்திப் பிடிக்கின்றன. இவ்வாறு கூறியுள்ளார்.