இனி மத்திய அரசு வேலை கிடைக்காதா? நிதியமைச்சகம் விளக்கம்!

நிதியமைச்சகத்தின் கீழ் வரும் செலவினங்கள் துறை எந்த புதிய பதவிகளையும் உருவாக்கக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இதனை ராகுல் காந்தி விமர்சித்த நிலையில், காலி பணியிடங்கள் நிரப்ப தடை இல்லை என நிதி அமைச்சக்ம் அறிவித்துள்ளது.
கொரோனாவினால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு அரசு கஜானாவே காலியாகி உள்ளது. இதனால் மத்திய அரசு துறைகள் அனைத்திலும் செலவுகளை குறைக்க மத்திய நிதியமைச்சகத்தின் செலவினங்கள் துறை கறாரான உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜூலை 1-க்கு பிறகு புதிய பதவிகள் உருவாக்கப்பட்டிருந்தால், அதனை நிரப்ப வேண்டாம். கட்டாய தேவையிருந்தால் அனுமதி பெற்று நிரப்பிக்கொள்ளலாம் என கூறியிருந்தது.
இதனை கேட்டு கடும் அதிருப்தி அடைந்த ராகுல் காந்தி, “குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச தனியார்மயமாக்கல் என்பது தான் மோடியின் திட்டம். அரசு அலுவலகங்களிலிருந்து நிரந்தர பணியாளர்களை வெளியேற்ற நினைக்கிறார்கள். இளைஞர்களின் எதிர்கால கனவுகளை திருடும் கூட்டம் இது” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
அவரது இவ்விமர்சனத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த மத்திய நிதியமைச்சகம், பதறியடித்துக்கொண்டு 2 பக்க விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “அந்த சுற்றறிக்கை உள் நடைமுறைகள் பற்றியது. மற்றபடி அரசு காலி பணியிடங்களை, எஸ்.எஸ்.சி., ஆர்.ஆர்.பி., யு.பி.எஸ்.சி மூலம் தொடர்ந்து வழக்கமான முறையில் நிரப்புவோம். அதில் எந்த தடையோ, கட்டுபாடோ கிடையாது.” என்றது.
அதன் பின்பு தான் மத்திய அரசு பணிகளின் தேர்வுக்காக படிப்பவர்கள் நிம்மதியடைந்துள்ளனர். குழப்பமான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை குழப்பாமல் இனியாவது நிதி அமைச்சர் தெளிவான அறிக்கைகளை வெளியிட வைக்க வேண்டும்.