மஹாராஷ்டிராவில் டாட்டா பவர் நிறுவனத்தின் மின்தொகுப்பில் ஏற்பட்ட கோளாறால் மும்பையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகர் முழுவதும் காலை 10:05 மணி முதல் மின்தடை ஏற்பட்டுள்ளது. மும்பை நகர் முழுவதும் மின்தடை ஏற்பட்டுள்ளதால், மின்சார ரயில்கள், இதர பணிகள் தடைப்பட்டுள்ளன. டாட்டா பவர் நிறுவனத்தின் மின்தொகுப்பில் ஏற்பட்ட கோளாறால் மும்பையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.
The electric supply is interrupted due to TATAs incoming electric supply failure.
Inconvenience is regretted.— BEST Electricity (@myBESTElectric) October 12, 2020
மின் தடை காரணமாக, மின்சார ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகரில் தொழிற்சாலைகள், வீடுகள், ரயில் போக்குவரத்து, தெரு விளக்குகள் எனப் பெரும்பாலான பயன்பாட்டுக்கு டாட்டா பவர் நிறுவன தொகுப்பில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த மின்சாரத்தை பாம்பே எலக்ட்ரிசிட்டி சப்ளை அண்டு டிரான்ஸ்போர்ட் கம்பெனி, ரிலையன்ஸ், அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் வெவ்வேறு பகுதிகளில் நுகர்வோருக்குப் பகிர்ந்தளிக்கின்றன.
இந்நிலையில் டாட்டா பவர் மின்வழங்கல் தொகுப்பில் ஏற்பட்ட கோளாறால் மும்பையில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மத்திய ரயில்வே, மேற்கு ரயில்வே மண்டலங்களில் மின்பாதைகளில் மின்சப்ளை இல்லை. எனவே மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் சிலர் ரயில் தடங்களில் நடந்து சென்றனர். நகர் முழுவதும் மின்சாரம் தடைப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்களும் வேலை செய்யவில்லை. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே மின் தடை சிறிது சிறிதாக சரி செய்யப் பட்டு வருவதாகவும், மும்பை சிஎஸ்டி ஸ்டேஷனில் மின் தடை சரிசெய்யப்பட்டு நிலைமை சீரடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
