இரண்டடி இடப் பிரச்னையால் உறவினரை எரித்துக் கொன்ற ரஜினி மன்ற நிர்வாகி!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 அடி இடப்பிரச்னை காரணமாக பக்கத்து வீட்டு உறவினரை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி உயிருடன் எரித்துக் கொலை செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த, சாத்தனூரை சேர்ந்தவர் ஆலடியான், (49). இவரது, பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சிவகுமார், (35) ரஜினி மக்கள் மன்ற தண்டராம்பட்டு ஒன்றிய செயலாளராக உள்ளார். இருவரது வீடுகளுக்கு இடையே 2 அடி அகலம் 60 அடி நீள பொது இடம் ஒன்று உள்ளது.
இந்த இடம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் போலீஸில் புகார் செய்தனர். போலீஸாரோ ஆலடியான் மகன் வெங்கட்ராமன், (27) என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரது தாய் மகனை காண வக்கீல் ஒருவரை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஆலடியான் வீட்டிற்குள் புகுந்து அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி சிவக்குமார் தீ வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த ஆலடியான் கீழ்பாக்கம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.