“ரயில்வே கட்டுப்பாடுகளை மீறினால், அபராதம் அல்லது சிறை தண்டனை” – ரயில்வே எச்சரிக்கை

‘ரயில்வே கட்டுப்பாடுகளை மீறினால், அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும்’ என, பொதுமக்களை, ரயில்வே பாதுகாப்பு படை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை தெரிவித்துள்ளதாவது: பண்டிகை காலம் நெருங்கி வருவதால், பயணியர் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பயணியர் பாதுகாப்பான முகமூடி அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.கொரோனா தொற்று பாதிப்புள்ளோர், பரிசோதித்து முடிவுக்கு காத்திருப்போர், ரயில்வே வளாகம் மற்றும் நிலையத்திற்குள் பிரவேசித்தல், ரயிலில் பயணித்தல் கூடாது.
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க, ரயில்வே நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். மீறுவதும், பயணியரின் கட்டுப்பாடற்ற செயல்களும் தொற்று பரவ வாய்ப்பாகி விடும்; பயணிருக்கு ஆபத்தை விளைவிக்கும். பயணியரின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்துவோருக்கு, ரயில்வே சட்டம், 1989, பிரிவு, 145, 153 மற்றும், 154ன்படி, அபராதம் அல்லது சிறை தண்டனை வழங்கப்படும்.இவ்வாறு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.