இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளைஞரை நம்பி, 3 நாட்கள் கிணற்றுக்குள் தவித்த இளம்பெண்!!

இன்ஸ்டாகிராமில் பழக்கமான இளைஞரை நம்பி சென்ற இளம்பெண் ஒருவர் கிணற்றுக்குள் தள்ளப்பட்டு மூன்று நாட்கள் தவித்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் மாலூரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் சமூகவலைதளங்களில் மூழ்கி கிடந்துள்ளார். அப்போது, ஆதர்ஷ்( 22) என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

அறிமுகமான ஒரே மாதத்தில் இருவரும் தொலைப்பேசியில் பேசி நெருக்கமாயினர். பின்னர் இருவரும் நேரில் சந்திக்கலாம் என முடிவெடுத்தனர். அதன்படி ஆதர்ஷின் அழைப்பை ஏற்ற அந்த பெண் அவரை சந்திக்க பெங்களூரு அருகிலுள்ள தேவனஹள்ளிக்கு பேருந்தில் சென்றார். பின்னர் அங்கிருந்து இளம்பெண்ணை தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு ஆதர்ஷ் அழைத்துச் சென்றார்.

பண்ணை வீட்டிற்கு சென்ற பின் ஆதர்ஷ், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஆனால் அப்பெண் திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் இல்லை எனவும் நாம் நண்பர்கள் தான் எனவும் கூறியுள்ளார். எவ்வளவு வற்புறுத்தியும் அப்பெண் கேட்காததால் ஆத்திரம் அடைந்த ஆதர்ஷ், அந்தப் பெண்ணை அங்கிருந்த கிணற்றுக்குள் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அப்போது இரவு 8 மணி என்பதால் அங்கு வேறு யாரும் இல்லை. இதனால் அப்பெண் எவ்வளவு சத்தம்போட்டும் அங்கு யாரும் வரவில்லை. அவர் கிணற்றுக்குள் தள்ளப்பட்ட மூன்று நாட்களுக்கு பின், கிணற்றில் இருந்து அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு கிராமத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு ஒரு கிரேன் கொண்டு வரப்பட்டு அந்த பெண்ணை கிணற்றிலிருந்து மீட்டது. பிறகு அவர் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அப்பெண் அளித்த புகாரின் பேரில் ஆதர்ஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x