“மீனவர்கள் நாளை முதல் 21ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம்” வானிலை மையம் எச்சரிக்கை!!

மத்திய வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால், தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவின் உள்மாவட்டங்களில் நிலை கொண்டதால் அங்கு கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை வெப்ப சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்களுக்கு 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
அதன்படி, வேலூர் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை நேற்று முதல் பெய்து வருகிறது. இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் பல இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும்.
கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மத்திய வங்க கடல் பகுதியில் இன்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெறும் பட்சத்தில், மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடலில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீச கூடும். நாளை மத்திய மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடலில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீச கூடும்.
நாளை மறுநாள் மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் வீச கூடும். எனவே, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீனவர்கள் நாளை முதல் 21ம் தேதி வரை மத்திய மேற்கு வங்க கடல், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.