முன்னாள் எம்.எல்.ஏ மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை – உயர்நீதிமன்றம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதி உறுப்பினராகக் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுவரை இருந்தவர் தளி ராமச்சந்திரன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரான இவர்மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலையில் உள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் ரெட்டி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கில் தளி ராமச்சந்திரன், தன்னை கொலை முயற்சி செய்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார். அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் தனக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளதாகவும் அந்த மிரட்டல் கடிதத்தில் தொடர்ந்து வழக்கை நடத்தினால் கொலை செய்வோம் என்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் மேலும் வழக்கு விசாரணையைச் சேலம் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தி வெங்கடேஷ், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் வழக்கைச் சேலம் மாவட்டத்திற்கு மாற்றுவது குறித்து தளி காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 25-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.