‘மன்னிப்புக் கேட்டால் எஸ்.வி.சேகரை கைது செய்யமாட்டோம்’ என சலுகை அளித்த காவல்துறையை கண்டித்த திருமுருகன் காந்தி!!

மன்னிப்புக் கேட்டால் கைது செய்யமாட்டோம் என எஸ்.வி.சேகருக்கு காவல்துறை சலுகை அளித்துள்ள நிலையில் அதை மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி கண்டித்துள்ளார்.
நடிகர் மற்றும் பாஜக பிரமுகர் எஸ்வி சேகர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் தேசியக் கொடியை குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். காவி என்றால் மோசமான நிறமா? தேசியக் கொடியிலுள்ள காவி நிறத்தை கட் செய்துவிட்டு முதல்வர் தேசியக் கொடியை ஏற்றுவாரா? என்று கூறியிருந்தார். இந்த வீடியோவுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது சமீபத்தில் எஸ்வி சேகர் நேரில் ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ‘தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் எஸ்வி சேகர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரை கைது செய்வோம்’ என்று உயர்நீதிமன்றத்தில் காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில் எஸ் வி சேகருக்கு இப்படி சலுகை அளிப்பது குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தன் முகநூல் பக்கத்தில் “பெருந்தலைவர்கள் பெரியார், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தது தேசத்துரோக குற்றம் என வழக்கு பதிவு செய்து கைது செய்த அரசு தற்போது தேசியக்கொடியை அவமதித்த வழக்காக இருந்தாலும் மன்னிப்பு கேட்டால் கைது செய்யமாட்டோம் என்று கூறுவது நியாயமானதா? தண்டனை சட்டங்களை நடைமுறை படுத்துவதில் ஏன் இந்த இரட்டை நிலை? பார்ப்பனர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? சட்டம் அவர்களுக்காக வளைந்து கொடுக்குமா?
ஆங்கில இனவெறி ஆட்சியில், வெள்ளையர் செய்யும் குற்றத்திற்கு சலுகையும், கருப்பர்களுக்கு தண்டனையும் கொடுக்கப்படுவது போன்ற இனவெறிக் கொள்கையாக இதை ஏன் பார்க்கக் கூடாது? இந்த இனவெறி சட்டத்தைத்தானே மனு ஸ்மிருதி சொல்லியது.. அதே மனு ஸ்மிருதியை நடைமுறைப்படுத்துகிறதா காவல்துறை? தந்தைப் பெரியார் குறிப்பிட்ட ‘ அரசின் அப்பட்டமான உயர் சாதிப் பாசத்தையே’ இந்த நிகழ்வு நமக்கு சொல்கிறது.” எனக் கூறியுள்ளார்.