“கரோனா வைரஸை அழிக்க முடியாது, அதன் பாதிப்பு எப்போதும் இருக்கும்” – பிரிட்டனின் விஞ்ஞானி

கரோனா வைரஸை அழிக்கமுடியாது என்றும், அதன் பாதிப்பு எப்போதும் இருக்கும் என்றும் பிரிட்டனின் அரசு ஆலோசனைக் குழுவைச்சேர்ந்த விஞ்ஞானி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கரோனா தொற்று உலகின் 190க்கும் மேற்பட்ட நாடுகளைக் கடுமையாக பாதித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு நாடுகளும் கரோனா தொற்று பாதிப்புக்கு எதிராகப் போராடி வருகின்றன.
இந்நிலையில் பிரிட்டனின் அரசு ஆலோசனை குழுவின் விஞ்ஞானி ஜான் எட்மண்ட்ஸ் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளது. “இந்த வைரஸுடன் நாம் எப்போதும் வாழ வேண்டி இருக்கும். இது ஒழிக்கப்பட வாய்ப்பில்லை.” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை எதிர்காலத்தில் அதிகளவு பயன்படுத்த வாய்ப்பிருப்பதால் நாம் அவற்றை கவனமுடன் கையாள வேண்டும் என தெரிவித்துள்ள எட்மண்ட்ஸ் பிரிட்டன் கரோனா தடுப்பூசி விவகாரத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் இதுவரை 6 கரோனா தடுப்பூசி விநியோக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. பிரிட்டனில் இதுவரை 7 லட்சத்து 89 ஆயிரத்து 229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.