தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் பாஜகவின் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே!

பாஜகவிலிருந்து விலகிய மூத்தத் தலைவரான ஏக்நாத் கட்சே சரத்பவார் முன்னிலையில் இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பாஜகவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து அக்கட்சியை வலுப்படுத்தி வந்த மூத்தத் தலைவரான ஏக்நாத் கட்சே தேவேந்திர பட்னாவிஸ் உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏக்நாத் இணைய உள்ளதாக அன்றைய நாளே தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் ஒருவரான ஜெயந்த் பாட்டீல் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அவர் கட்சியி இணைவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் முன்னிலையில் இன்று பிற்பகல் ஏக்நாத் கட்சே கட்சியில் இணைந்தார். அவருக்கு பொன்னாடைப் போர்த்தி கட்சியில் ஜெயந்த் பாட்டீல் வரவேற்றார்.
இதனையடுத்து பேசிய ஏக்நாத் கட்சே, பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகியதாகக் கூறினார். எனது தனிப்பட்ட வாழ்க்கையையும், அரசியல் வாழ்க்கையையும் அழிக்கும் நோக்கில் பட்னாவிஸ் செயல்பட்டதாகவும் ஏக்நாத் குற்றம்சாட்டினார்.