பா.ஜ.க விற்கே சவால் விட்ட உத்தவ் தாக்கரே!!!

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு, முதல்வர் பதவியை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக பா.ஜ.க – சிவசேனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டதையடுத்து, நீண்ட கால கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. பா.ஜ.க கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறியது. அதன்பிறகு பா.ஜ.க-வும், சிவசேனாவும் எதிரும் புதிருமாகவே இருந்து வருகின்றனர்.

பால் தாக்கரே சிவசேனாவின் தலைவராக இருந்த வரை, ஒவ்வோர் ஆண்டும் தசராவை ஒட்டி தாதரில் உள்ள சிவாஜி பார்க்கில் பிரமாண்ட பேரணியில் உரை நிகழ்த்துவது வழக்கம். அவரது மறைவுக்கு பின் உத்தவ் தாக்கரே, தொடர்ந்து உரை நிகழ்த்தி வருகிறார்.

இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றின் நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு குறைந்த பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு மும்பை சிவாஜி பார்க்கில் உள்ள வீர் சவார்க்கர் உள் அரங்கத்தில், தசரா நிகழ்ச்சி நடைபெற்றது. உத்தவ் தாக்கரே

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிவசேனா கட்சியின் தலைவரும் மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே, “நாங்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது, துணிவிருந்தால் எங்கள் ஆட்சியை கவிழ்த்து பாருங்கள்” என்று பா.ஜ.க-வுக்கு நேரடியாக சவால் விடுத்தார்.

அவர் பேசுகையில்,“உலக நாடுகள் அனைத்தும் கொரோனா நோய்த்தொற்றில் சிக்கித் தவித்து வரும் நேரத்தில், இந்தியாவில் மட்டும் விசித்திரமான விஷயம் ஒன்று நடந்து வருகிறது. அதாவது, பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆட்சியை கவிழ்ப்பதில் மட்டுமே அக்கட்சி கவனம் செலுத்தி வருகிறது. மத்தியில் முழு அதிகாரத்துடன் பாஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு, பா.ஜ.க-வின் கட்டுப்பாடற்ற நிலை காரணமாக நாடு குழப்பத்தின் விளிம்பில் உள்ளது.

நான் முதல்வராகப் பதவியேற்றதில் இருந்து இன்று வரை, எங்கள் ஆட்சியைக் கலைக்க தேதி குறித்துவிட்டதாக பல்வேறு தேதிகளைக் கேள்விப்பட்டு வருகிறேன். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை. உங்களுக்குத் தைரியமிருந்தால் எங்கள் ஆட்சியை கலைத்து பாருங்கள்.

“பா.ஜ.க-வினர் நட்பாகப் பேசிப் பழகுவார்கள். அதேசமயம் நண்பர்களின் முதுகில் குத்தவும் தயங்க மாட்டார்கள். பீகாரில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு நிதிஷ் குமாரும் இதே பிரச்னையை சந்திக்கப் போகிறார்” என்றார்.

கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், மகாராஷ்டிராவில் கோயில்கள் திறக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் நிலைப்பாடு குறித்து அம்மாநிலா கவர்னர் கோஷ்யாரி கேள்வியெழுப்பினார். இதுதொடர்பாக முதல்வர் – கவர்னர் இடையே மோதல் போக்கு இருந்துவருகிறது.

தசரா உரையில் இதைக் குறிப்பிட்டு பேசிய உத்தவ் தாக்கரே, “நாங்கள் இன்னும் கோயில்களைத் திறக்கவில்லை என்பதால் இந்துத்துவா குறித்து எங்களிடம் கேட்கின்றனர். மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சியை தடை செய்துவிட்டு, கோவாவில் தடை செய்யவில்லை. இதுவா உங்கள் இந்துத்துவா? வெறும் கோயில்களைத் திறப்பது மட்டுமே இந்துத்துவா அல்ல. இந்துத்துவா என்றால் என்ன என்பதைப் பற்றி ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், `கோயில்களைத் திறந்து பூஜை செய்வது மட்டும் இந்துத்துவா அல்ல’ என அழகாக விளக்கியுள்ளார். எனவே, அங்கிருந்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அணியும் கறுப்பு தொப்பிக்குக் கீழே, மூளை இருந்தால் மோகன் பகவத் சொல்வதைப் புரிந்துகொள்ளுங்கள்” என்றார் தாக்கரே.

பீகார் தேர்தல் பிரசாரத்தில் பா.ஜ.க-வின் வாக்குறுதியைச் சுட்டிக்காட்டி பேசிய உத்தவ் தாக்கரே, “நீங்கள் பீகாரில் இலவசமாக கொரோனா தடுப்பூசி கொடுப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி என்றால் நாட்டின் மற்ற பகுதிகள் பாகிஸ்தானா அல்லது வங்காளதேசமா?” என்று கேள்வி எழுப்பினார். சுஷாந்த் சிங்

சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கைப் குறிப்பிட்டு பேசிய உத்தவ், “பீகார் மாநில மகனின் நீதிக்காக அழுகிறவர்கள் மகாராஷ்டிராவின் மகன் (ஆதித்யா தாக்கரே), மும்பை காவல்துறையினரை அவதூறாகப் பேசி படுகொலை செய்து வருகின்றனர்.

அரசாங்கத்தின் மீதும், எங்கள் குடும்பத்தின் மீதும், ஆதித்யாவின் மீதும் களங்கம் கற்பிக்கின்றனர். இருப்பினும், எங்கள் கை சுத்தமாக இருப்பதால், நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

ஜூன் மாதம் முதல் மகாராஷ்டிரா மாநிலம் பல இயற்கை பேரழிவுகளைச் சந்தித்தபோதிலும், மத்தியில் ஆளும் மோடி அரசு மாநிலத்துக்கு நிதி உதவி செய்யவில்லை என்றும், 38,000 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை வழங்கவில்லை என்றும் அவர், தனது உரையில் குறிப்பிட்டார். நாட்டின் அனைத்து மாநில முதல்வர்களும் கட்சி வேறுபாடுகளைக் களைந்து, ஜிஎஸ்டி குறித்து விரிவான மறுஆய்வு மேற்கொள்ள, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஜி.எஸ்.டி குறித்து பேசிய உத்தவ் தாக்கரே, “அவர்கள் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தும்போது நாங்கள் அதை எதிர்த்தோம். இந்த முறையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகக் கூறினோம். ஜிஎஸ்டி முறை தோல்வியடைந்தது என்றால், அதை அகற்ற வேண்டும். பழைய வரி வசூல் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வருமாறு மற்ற மாநிலங்களின் முதல்வர்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்றார்.

மேலும் அவர், தனது பேச்சில்,“சமீபத்தில் யாரோ ஒருவர் மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (Pok) போன்றது என்று சொன்னார். அவர்கள் வேலைக்காக மும்பைக்கு வந்து பின்னர், இந்த நகரத்தை அவதூறு பேசுகிறார்கள். இது `உண்ட வீட்டுக்கே ரெண்டகம்’ செய்வதற்குச் சமம்” என்று கங்கனா ரணாவத் பெயரை குறிப்பிடாமல் உத்தவ் தாக்கரே விமர்சித்துப் பேசினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x